சென்னை
மிச்சாங் புயல் காரணமாக ஏற்பட்ட பெருமழையால் கடுமையாக பாதிக்கப்பட்டு, பலராலும் கவனிக்கப்படாமல் விடப்பட்ட பகுதி வடசென்னையாகும். ஏழை எளிய மக்கள் நிறைந்து வாழும் வடசென்னையின், புளியந்தோப்பு பகுதியிலுள்ள குருசாமி நகர், ராஜா தோட்டம், கே.எம். கார்டன் போன்ற இடங்களில், மழை நீர் கழுத்தளவு தேங்கிய நிலையில், அங்கு மக்கள் உணவு – குடிநீர் கூட கிடைக்காமல் கடும் இன்னல்களை எதிர்கொண்டனர். அப்பகுதியில் அரசும் உடனடியாக மீட்பு மற்றும் துயர் துடைப்புப் பணிகளில் இறங்காத நிலையில், மக்கள் கடும் கொந்தளிப்பில் உள்ளனர்.
தற்போது தான் சில நாட்களுக்கு முன்பு வெள்ள நீர் வடிந்த நிலையில், அங்கு குப்பைகளைக் கூட அரசு இன்னும் அகற்றாமல் உள்ளது. கழுத்தளவு தண்ணீர் தேங்கிய வீடுகளில், தங்கள் உடைமைகளை எல்லாம் இழந்து தவிக்கும் மக்கள் எவ்வித துயர் துடைப்புப் பணியும் நடைபெறாத நிலையில், விரக்தியில் உள்ளனர்.
இதுகுறித்து அறிந்து, தமிழ்த்தேசியப் பேரியக்கத் தோழர்கள் அப்பகுதியில் துயர் துடைப்புப் பணிகள் மேற்கொண்டு வருகின்றனர். கடந்த 10.12.2023 அன்று, அப்பகுதியில் மக்களுக்கு அரிசி, போர்வை, நாப்கின் போன்ற அடிப்படைப் பொருட்கள் வழங்கினர்.
இதனைத் தொடர்ந்து, நேற்று (12.12.2023), சுவிட்சர்லாந்து வாழ் ஈழத்தமிழர்களின் பங்களிப்பில்-“உலக இந்து ஆன்மிகக் கூட்டமைப்பு”(World Spiritual Tamil Hindu Federation – WSTHF) சார்பில், ஜி.கே.வேலுப்பிள்ளை கணேசக்குமார் 150-க்கும் மேற்பட்ட ஆண்கள் – பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான உடைகள் பொது மக்களுக்கு வழங்கப்பட்டது. தமிழ்த்தேசியப் பேரியக்கத் துணைப் பொதுச் செயலாளர் க.அருணபாரதி, தலைமைச் செயற்குழு உறுப்பினர் வெற்றித்தமிழன் ஆகியோர் உடனிருந்தனர். அப்பகுதி சமூக ஆர்வலர் ஜீவா மற்றும் இளைஞர்கள் நிகழ்வை ஒருங்கிணைத்தனர். தொடர்ந்து, துயர் துடைப்புப் பொருட்கள் வழங்கும் பணிகளை ஒருங்கிணைக்க திட்டமிடப்பட்டு வருகிறது.






