
கோவில்பட்டியில் வீட்டின் கதவை உடைத்து நகை, பணம் மற்றும் பொருட்களை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை அடுத்துள்ள இனாம் மணியாச்சி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் சங்கர் கணேஷ். இவரது மனைவி ராஜேஸ்வரி (33). இவர் கடந்த 18-ந் தேதி தனது வீட்டை பூட்டிவிட்டு உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்காக திருச்சி அருகே உள்ள மணப்பாறைக்கு சென்றார். இந்த நிலையில் நேற்று காலை அவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் சிலர் அந்த வழியாக சென்றனர்.
அப்போது ராஜேஸ்வரியின் வீட்டுக்கதவில் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனே அவர்கள் இதுகுறித்து ராஜேஸ்வரிக்கு தகவல் அளித்தனர்.இதன்பேரில் ராஜேஸ்வரி உடனே புறப்பட்டு தனது வீட்டுக்கு வந்தார். வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது அங்கிருந்த பீரோவில் வைக்கப்பட்டிருந்த ரூ.50 ஆயிரம், ஒரு பவுன் தங்க நகை, வெள்ளி பாத்திரங்கள் திருட்டு போனது தெரிய வந்தது.
ராஜேஸ்வரி வெளியூர் சென்றிருப்பதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் அவரது வீட்டு கதவின் பூட்டை உடைத்து உள்ளே சென்று நகை, பணத்தை திருடி சென்றிருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக ராஜேஸ்வரி கோவில்பட்டி மேற்கு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதன்பேரில் சப்- இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து அதனடிப்படையில் மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.







