திருவாரூர் மாவட்டம் காட்டூரில் தயாளு அம்மாள் அறக்கட்டளை சார்பில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நினைவாக ரூ.12 கோடியில் கலைஞர் கோட்டம் கட்டப்பட்டுள்ளது. 7000 சதுர அடி பரப்பில் ரூ 12 கோடி செலவில் திருவாரூர் ஆழித்தேர் வடிவில் கலைஞர் கோட்டம் கட்டப்பட்டுள்ளது. இதனை இன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
கலைஞர் கோட்டத்தில் கருணாநிதி சிலை, அவரது பொதுவாழ்வை சித்தரிக்கும் அருங்காட்சியகம், முத்துவேலர் நூலகம், திருமண மண்டபங்கள் உள்ளன. திறப்பு விழாவில் பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் பங்கேற்றுள்ளார். இந்த திறப்பு விழா நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது;-
மன்னர்கள் கூட தாங்கள் ஆளும் போது தான் கோட்டமும், கோட்டையும் கட்டுவார்கள். ஆனால் கலைஞரின் மறைவுக்குப் பிறகு இங்கு கோட்டம் எழுப்பப்பட்டிருக்கிறது. இன்னமும் கலைஞர் நம்மோடு வாழ்கிறார் நம்மை ஆள்கிறார் என்பதன் அடையாளமே இந்த கோட்டம்.
தேர் மீண்டும் நிலைக்கு வந்து சேர்வது போல் திருவாரூரில் கலைஞருக்கு கோட்டம் அமைக்கப்பட்டுள்ளது. மறைந்த பிறகும் மருத்துவமனையாக, நூலகமாக, கோட்டமாக பயணித்துக் கொண்டிருப்பவர் நமது கலைஞர் என்று பெருமிதத்தோடு கூறினார். அவரை நாடு போற்றும் தலைவராக உருவாக்கிய ஊர் திருவாரூர் மாவட்டம். அறிஞர் அண்ணாவை கலைஞர் கருணாநிதி முதன்முதலில் சந்தித்தது திருவாரூரில் தான் என்பது ஒரு வலராற்று நினைவு.”







