உத்திரப்பிரதேசம் மாநிலத்தில் யமுனை ஆற்றுக்கு அடியில் பதிக்கப்பட்டிருந்த எரிவாயுக் குழாய் வெடித்து சிதறியதைக் கண்ட மக்கள் அலறித் துடித்து ஓடினர். அதிர்ஷ்டவசமாக மக்களுக்கு எந்த ஆபத்து ஏற்படவில்லை.
உத்தரபிரதேசத்தின் பாக்பத் மாவட்டத்தில் தனியார் நிறுவனம் ஒன்று எரிவாயு விநியோகத்தில் ஈடுபட்டு வருகிறது. அதற்காக அங்குள்ள யமுனை ஆற்றின் அடியில் குழாய்களைப் பதித்து அதன் மூலம் எரிவாயு விநியோகம் செய்து வருகிறது.
தற்போது பெய்து வரும் நல்ல மழையின் காரணமாக யமுனை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் , அங்குள்ள ஜகோஷ் என்ற கிராமத்தில் திடீரென யமுனை ஆற்றில் சுமார் 30 அடி உயரத்திற்கு தண்ணீர் பீறிட்டு எழுந்தது. இதனைக் கண்ட கிராம மக்கள் திடீரென தண்ணீர் உயர்ந்து எழுவதைக் கண்டதும் காரணம் புரியாமல் பயத்தில் தெறித்தோடினார்கள்.
இது உள்ளூர் மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுதியது. இச்சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் மாவட்ட துணை ஆட்சியர் உள்ளிட்ட மற்றும் பல உயர் அதிகாரிகள் அங்கு விரைந்து சென்று ஆய்வு செய்தனர். அப்போது தான் ஆற்றுக்கு அடியில் செல்லும் எரிவாயுக் குழாய் வெடித்து அதிலிருந்து கிளம்பும் எரிவாயுவால் தண்ணீர் பீறிட்டு எழுவது கண்டறியப்பட்டது.
இதையடுத்து உடனடியாக வெடிப்பு ஏற்பட்ட குழாயில் எரிவாயு செல்வதை தனியார் நிறுவனம் நிறுத்தியது. அதன் பின்னர் தண்ணீர் உயரமாக எழுவதும் நின்றது.
அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிவித்த மாவட்டத் துணை ஆட்சியர் மக்களை எச்சரிக்கையுடன் இருக்கும்படி அறிவுறுத்தியுள்ளார்.இத்தகவலின் காணொளியானது, தற்போது வைரலாகி வருகிறது.





