குடியரசு துணைத் தலைவர் மாளிகையில், குடியரசு துணைத் தலைவர் திரு சி. பி. ராதாகிருஷ்ணனுடன், ஆந்திரப் பிரதேசம் குண்டூர் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளியைச் சேர்ந்த மாணவர் குழுவினர், இன்று சந்தித்து உரையாடினார்.
அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த 27 மாணவிகள் உட்பட 41 தகுதி வாய்ந்த மாணவர்கள் அடங்கிய இந்தக் குழு, 10-ம் வகுப்புத் தேர்வுகளில் மிகச் சிறப்பாகச் செயல்பட்டு, தற்போது தில்லிக்குக் கல்விச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.
ஏழை மற்றும் விளிம்புநிலையில் உள்ள அரசுப் பள்ளி மாணவர்களைக் கல்விச் சுற்றுப்பயணத்திற்காக தில்லிக்கு அழைத்து வரும் இந்த முயற்சிக்குப் பாராட்டு தெரிவித்த குடியரசு துணைத் தலைவர், இதுபோன்ற பயணங்கள், மாணவர்கள் வகுப்பறைகளுக்கு அப்பால், பல்வேறு விஷயங்களைக் கற்றுக் கொள்ளவும், அவர்களின் அறிவை விரிவுபடுத்தவும் உதவுகின்றன என்று கூறினார். மாணவர்களுடன் கலந்துரையாடியதில் மகிழ்ச்சி அடைவதாக அவர் தெரிவித்தார்.
இடர்பாடுகள் தனிநபர்களை வலிமையானவர்களாகவும், அதிக தன்னம்பிக்கை உடையவர்களாகவும், வெற்றிபெற வேண்டும் என்ற உறுதியான மனப்பான்மை கொண்டவர்களாகவும் உருவாக்குகின்றன என்று அவர் குறிப்பிட்டார். தற்போதைய பொருளாதாரச் சூழலைக் கண்டு மாணவர்கள் மனம் தளர வேண்டாம் என்று அறிவுறுத்திய அவர், கல்வி அவர்களது வாழ்வில் வெற்றிபெறச் செய்யும் என்று கூறினார்.
பல்வேறு சிறந்த விஞ்ஞானிகள், நிர்வாகிகள், ஆசிரியர்கள், புதுமைப் படைப்பாளர்கள், தொழில்முனைவோர் மற்றும் நாட்டின் தலைவர்கள் அரசுப் பள்ளிகள் மற்றும் பொது நிறுவனங்களில் இருந்து தான் உருவாகியுள்ளனர் என்பதை குடியரசு துணைத் தலைவர் மாணவர்களுக்கு அறிவுறுத்தினார்.







