சென்னை: விஜயகாந்துக்கு மியாட் மருத்துவமனையில் ஆக்சிஜன் உதவியுடன் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலக் குறைவு காரணமாக கடந்த சில ஆண்டுகளாக வீட்டிலேயே ஓய்வில் இருந்து வருகிறார். சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதால், அவ்வப்போது மருத்துவமனைக்கு சென்று பரிசோதனைகளை மேற்கொண்டு வந்தார். வீட்டில் ஓய்வில் இருந்த விஜயகாந்துக்கு இருமல், காய்ச்சல், சளி தொந்தரவுகள் ஏற்பட்டதால் கடந்த மாதம் 18-ம் தேதி சென்னை கிண்டியை அடுத்த மணப்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவு (ஐசியு)-வில் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வந்தது.
இதற்கிடையே, விஜயகாந்த் உடல்நிலையில் தற்போது பின்னடைவு ஏற்பட்டது. அவரை நுரையீரல் நிபுணர்கள் கண்காணித்து தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த நிலையில் அவருக்கு முழுவதுமாக ஆக்சிஜன் உதவியுடன் மருத்துவர்கள் சிகிச்சை மேற்கொண்டு வருகின்றார்கள்.






