இந்தியாவில் நடைபெற்ற ஜி20 உச்சி மாநாடு முடிவடைந்து, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் டெல்லியிலிருந்து தனது வியட்நாம் பயணத்தை தொடங்கினார். வியத்நாம் பயணத்தின் போது செய்தியாளர்களிடம் பேசிய ஜோ பைடன், ‘மனித உரிமைகளை காப்பது’ மற்றும் ‘பத்திரிக்கை சுதந்திரம்’ போன்ற பிரச்னைகள் குறித்து தான் இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடியுடனான சந்திப்பின் போது எழுப்பியதாக குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி, கடந்த ஜூன் மாதம் முதல் முறையாக மேற்கொண்ட அமெரிக்கப் பயணத்தின்போது, ஏராளமான மனித உரிமை அமைப்புகள், இந்தியாவில் மனித உரிமை மீறல் மற்றும் பத்திரிகை சுதந்திரம் குறித்து போர்க்கொடி எழுப்பி அது குறித்து ஜோ பைடன் பேச வலியுறுத்தியிருந்த நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இந்த தகவலை வெளியிட்டிருப்பது மிகவும் முக்கியத்துவம் உள்ளதாக கருதப்படுகிறது.
அமெரிக்காவில், பிரதமர் நரேந்திர மோடியும் அதிபர் ஜோ பைடனும் அரிதிலும் அரிதாக கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அந்த நிகழ்வின்போது, அமெரிக்காவைச் சேர்ந்த பெண் பத்திரிகை நிருபர் எழுப்பிய கேள்விக்கு, இந்தியாவில் ஆளும் பாஜக தலைமையிலான மத்திய அரசில் சிறுபான்மையினர் நடத்தப்படும் விதம் குறித்த கேள்விக்கு பிரதமர் நரேந்திர மோடி பதிலளித்திருந்தார்.
இந்த நிகழ்வுக்குப் பிறகு, கேள்வி எழுப்பிய பெண் பத்திரிகை நிருபரை குறிவைத்து, ஆளும் பாஜக ஆதரவாளர்கள் சமூக வலைத்தளங்களில் கடுமையாக விமரிசித்திருந்தனர். இந்த செயலுக்கு, வெள்ளை மாளிகை தனது கண்டனத்தைப் பதிவு செய்ததோடு, இதனை ஏற்றுக்கொள்ள முடியாது, ஜனநாயகக் கொள்கைளுக்கு எதிரானது என்றும் குறிப்பிட்டிருந்தது.
இந்த நிலையில்தான், செப்டம்பர் 8ஆம் தேதி, இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு, பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் விருந்தளித்திருந்தார். “நான் எப்போதும் செய்வது போல், மனித உரிமைகளை மதிக்க வேண்டியதன் முக்கியத்துவத்தையும், வலுவான மற்றும் வளமான நாட்டைக் கட்டியெழுப்புவதில் பொதுச் சமூகம் மற்றும் சுதந்திரமான பத்திரிகைகளின் முக்கிய பங்கையும் மோடியிடம் நான் உணர்த்தினேன்” என்று வியட்நாமில் ஜோ பிடன் கூறினார்.
ஆனால், பிரதமர் மோடி மற்றும் அதிபர் ஜோ பைடன் இடையேயான சந்திப்பின்போது பேசப்பட்ட விவகாரங்கள் குறித்து வெளியிட்ட அறிக்கையில், மனித உரிமைகள் குறித்த விவாதம் குறிப்பிடப்படுவதை மத்திய அரசு தவிர்த்தது குறிப்பிடத்தக்கது.







