சென்னை:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் என்.சங்கரய்யா உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், சுதந்திரப் போராட்ட வீரருமான என்.சங்கரய்யா (102) சென்னை குரோம்பேட்டை நியூ காலனியில் வசித்து வருகிறார். அவருக்கு சளி, காய்ச்சல் காரணமாக ஆக்சிஜன் குறைவு ஏற்பட்டுள்ளதால் சென்னை அப்போலோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் ஆகியோர் மருத்துவமனைக்கு சென்று அவரை சந்தித்து சிகிச்சை தொடர்பாக கேட்டறிந்தனர். சங்கரய்யாவின் மகன் நரசிம்மன் மற்றும் தென்சென்னை மாவட்ட செயலாளர் ஆர்.வேல்முருகன் உள்ளிட்ட மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் உடன் இருந்து கவனித்து வருகின்றனர்.
அவர் உடல்நலம் பெற்று வர அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருகிறது. கட்சியினர் யாரும் அவரை நேரில் காண வர வேண்டாம் என மார்க்சிஸ்ட் கட்சி தொண்டர்களை கேட்டுக்கொண்டுள்ளது.






