திருவண்ணாமலையில் இருந்து பண்ருட்டி வழியாக வந்த தனியார் பேருந்து, கடலூரில் இருந்து பண்ருட்டிக்கு சென்ற பேருந்து மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். பேருந்துகளில் பயணம் செய்த 80-க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயமடைந்தனர். படுகாயமடைந்தவர்களில் ஏராளமானோர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் கடலூர் மாவட்ட ஆட்சியரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு விபத்து நடந்த இடத்திற்கு சென்று மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். மேலும் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்த விபத்தில் உயிரிழந்த 4 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவியும், படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் நிதியுதவியும், லேசான காயம் அடைந்தவர்களுக்கு தலா 25 ஆயிரம் நிதியுதவியும் அவர் இன்று அறிவித்துள்ளார்.







