சைதாப்பேட்டை:
தேசிய காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை தகுதி நீக்கம் செய்ததை கண்டித்து சென்னை சைதாப்பேட்டையில் காங்கிரஸ் கட்சியினர் அற வழியில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கர்நாடகா மாநிலத்தில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் மோடி சமூகத்தை பற்றி காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் ராகுல் காந்தி அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதனடிப்படையில், அவரது எம்பி பதவி தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து இந்தியா முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் சார்பில் அற வழி போராட்டம் நடைபெற்று வருகிறது. அதன்படி சென்னை சைதாப்பேட்டையில் இன்று மாலை காங்கிரஸ் கட்சியினர் அறவழியில் போராட்டம் நடத்தினர்.
தென்சென்னை மத்திய மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் வக்கீல் எம்.ஏ.முத்தழகன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தை மாநில துணைத் தலைவர் போபண்ணா, கன்னியாகுமரி எம்.பி. விஜய் வசந்த் ஆகியோர் தொடங்கி வைத்தனர். ஆர்ப்பாட்டத்தை மாநில துணைத் தலைவர் பொன்.கிருஷ்ணமூர்த்தி, தமிழ்நாடு மாநில காங்கிரஸ் தலைவி சுதா ராமகிருஷ்ணன் ஆகியோர் முடித்து வைத்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் மாநில பொதுக்குழு உறுப்பினர் சைதை பி.ஜி.செல்வகுமார், மாவட்ட துணை தலைவர் சைதை ஆர்.தமிழரசன், வட்ட தலைவர் ஆர்.நமசிவாயம், தொழிற்சங்கத்தை சேர்ந்த டாக்டர்.இந்திரன் நாஞ்சில் உள்பட ஏராளமான காங்கிரசார் பங்கேற்று அற வழியில் ஆர்ப்பாட்டம் செய்தனர். அப்போது , ராகுல் காந்தியை எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம்செய்த மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.







