இந்திய தர நிர்ணய அமைவனம் பிஐஎஸ் ஒரு இந்திய தேசிய நிர்ணய அமைப்பாகும். இது இந்திய அரசின் நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஒரு சட்டப்பூர்வ அமைப்பாகும். இது பொருள்களுக்கான தர உரிமம் (ISI மார்க்), மேலாண்மை அமைப்புகள் சான்றிதழ், தங்கம் மற்றும் வெள்ளி நகைகளில் ஹால் மார்க்கிங் உரிமம் மற்றும் ஆய்வக சேவைகள் போன்ற பல்வேறு திட்டங்களை தொழில்துறையின் நலனுக்காகவும் அதையொட்டி நுகர்வோர் பாதுகாப்பை நோக்கமாகவும் கொண்டு செயல்படுத்துகிறது.. அண்ணா பல்கலைக்கழகத்தின் தொழில் முனைவோர் மேம்பாட்டு மையம், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள டிஏஜி ஆடிட்டோரியத்தில் இன்று ஒரு ஸ்டார்ட்டி மாநாட்டை நடத்தியது. இதில் அண்ணா பல்கலைக்கழகத் துணை வேந்தர் டாக்டர். ஆர். வேல்ராஜ், அண்ணா நிர்வாக பணியாளர் கல்லூரியின் இயக்குநரும், கூடுதல் தலைமைச் செயலாளருமான டாக்டர். விக்ரம் கபூர், ஜப்பான் எக்ஸ்டர்னல் ட்ராடா அமைப்பு தலைமை இயக்குநர் திரு கவுரு ஸ்ரீரைஷி, தொழில்முனைவோர் மேம்பாட்டு மையத்தின் இயக்குநர் டாக்டர் ஜி.எஸ். மகாலட்சுமி ஆகியோர் உரையாற்றினர்.
மாநாட்டின் போது, ஒரு முக்கிய நிகழ்வாக, அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள பல்வேறு துறைகளில் 39 தரநிலைக் கழகங்கள் பிஐஎஸ்-ல் இன்று துவக்கி வைக்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் இந்திய தர நிர்ணய அமைவன சென்னை கிளையின் இயக்குநர் மற்றும் தலைவர் விஞ்ஞானி திருமதி ஜி.பவானி, விஞ்ஞானி திரு தினேஷ் ராஜகோபாலன் ஆகியோர் கலந்து கொண்டனர். ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களை உறுப்பினர்களாகக் கொண்ட கல்வி நிறுவனங்களில் தரநிலை கழகங்களை உருவாக்கும் முயற்சியை பிஐஎஸ் மேற்கொண்டுள்ளது. இந்த கழகங்களின் கீழ், பல்வேறு நடவடிக்கைகள் மூலம், இளம் திறமையாளர்கள் தரம் மற்றும் தரப்படுத்தல் துறையில் கற்கும் வாய்ப்புகளைப் பெறுகின்றனர். கழகங்களின் செயல்பாடுகளில் ஆசிரியர்கள் முக்கியப் பங்காற்றுவதுடன், மாணவர்களின் படைப்பாற்றலை மேம்படுத்தவும், அவர்களின் அறிவியல் மனோபாவத்தை மேம்படுத்தவும், கழகங்களின் வழிகாட்டிகள், மாணவர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் செயல்படுவார்கள். தரநிலைக் கழகங்கள் ஏற்கனவே பள்ளி- கல்லூரிகளிடையே முக்கியத்துவத்தைப் பெற்றுள்ளன. மேலும் மாணவர்களின் பள்ளிக் கல்வி அனுபவத்தை மேம்படுத்துவதற்கும், அவர்களின் தொழில்முறை மற்றும் தனிப்பட்ட வளர்ச்சியை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகளை வழங்குவதற்கும் கல்வி நிறுவனங்களால் இத்தகைய நிகழ்வுகள் ஆர்வத்துடன் ஊக்குவிக்கப்படுகின்றன.