அமலாக்கத்துறை இயக்குநராக சஞ்செய் குமார் மிஸ்ராவுக்கு பணி நீட்டிப்பு கோரி, உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு புதிய மனு ஒன்றினை இன்று தாக்கல் செய்துள்ளது.
மிஸ்ராவுக்கு மூன்றாவது முறையாக பணி நீட்டிப்பு செய்யப்பட்டது சட்ட விரோதம் என்று தெரிவித்ததோடு, ஜூலை 31 உடன் அவரது பணிக்காலத்துக்கு முற்றுப்புள்ளி வைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட 2 வாரங்களுக்குள், வெளிப்பட்டிருக்கும் மத்திய அரசின் இந்த நகர்வு முக்கியத்தும் பெற்றுள்ளது.
2018ல் அமலாக்கத்துறை இயக்குநராக பொறுப்பேற்றார் சஞ்செய் குமார் மிஸ்ரா. 1985 பேட்ச் ஐஆர்எஸ் அதிகாரியான இவரது அமலாக்கத்துறை இயக்குநர் பணிக்காலத்தை, மத்திய அடுத்தடுத்து நீட்டித்து வந்தது. மேலும், இவரது தலைமையிலான அமலாக்கத்துறையினரின் பாய்ச்சலால் பாதிக்கப்பட்ட எதிர்க்கட்சியினர் நீதிமன்றத்தை அணுகினர். ஓய்வு பெற்றவர்களுக்கு பதவி நீட்டி வழங்குவதில் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகள் மீறப்பட்டுள்ளதாக மத்திய அரசு மீது எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. எஸ்.கே.மிஸ்ராவுக்கு தொடர்ந்து பணி நீட்டிப்பு வழங்கப்படுவது தொடர்பாக உச்ச நீதிமன்றமும் மத்திய அரசின் தலையில் குட்டு வைத்தது.
இதற்கிடையே, மூன்றாவது முறையாக மிஸ்ராவுக்கு பணி நீட்டிப்பு வழங்கப்பட்டது சட்ட விரோதம் என்று அண்மையில் உச்ச நீதிமன்றம் உத்தரவு வழங்கியது. மேலும், நடப்பாண்டு நவம்பர் வரை பதவியில் நீடிக்க வாய்ப்புள்ள மிஸ்ராவை ஜூலை 31 உடன் அதிலிருந்து விலகுமாறும், அந்த அவகாசத்தில் அமலாக்கத்துறைக்கான புதிய இயக்குநரை தேர்வு செய்து கொள்ளுமாறும் மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதற்கான அவகாசம் நெருங்கிய சூழலில், இன்று உச்ச நீதிமன்றத்தை நாடிய மத்திய அரசு, அமலாக்கத்துறை இயக்குநராக மிஸ்ராவுக்கு பதவி நீட்டிப்பு கோரி புதிதாக மனு செய்துள்ளது. இது தொடர்பான விசாரணை வியாழன்று பிற்பகல் 3.30 மணிக்கு நடைபெறும் என நீதிமன்றம் அறிவித்துள்ளது.







