சென்னை:
சென்னை பெரம்பூரில் திமுக சிறுபான்மை நல உரிமை பிரிவின் சார்பில் இன்று நடந்த கிறிஸ்துமஸ் விழாவில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேக் வெட்டி கொண்டாடினார். பின்னர் நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர்; கிறிஸ்துமஸ் விழாவை நடத்துபவர் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் நடத்துகிறார். மத நல்லிணக்கமே திராவிட மாடல் அரசு. எந்த மதமும் வேறுபாட்டை போதிப்பதில்லை.
இந்தியா பல்வேறு மதத்தினை பின்பற்றி ஒற்றுமையாக இருந்து வரும் நாடு. இந்த திராவிட மாடல் அரசில் அனைத்து தரப்பு மக்களும் ஒற்றுமையுடன் வாழ்கின்றனர். மக்களின் ஒற்றுமையை ஒரு கூட்டம் பிரிக்க பார்க்கிறது என கூறினார். தொடர்ந்து பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு உண்மையான அக்கறையுடன் உதவி வழங்கினோம். 98% குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.6,000 நிவாரணத் தொகை வழங்கப்பட்டுள்ளது. ரேஷன் கார்டு இல்லாதவர்கள் ரூ.6000 நிவாரணத்துக்கு 5.5 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். நிவாரணத் தொகை கிடைக்காதவர்களுக்கு, நிவாரண உதவி கிடைக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.
வெள்ளம் பாதிக்கப்பட்ட தென்மாவட்ட மக்களுக்கும் நிவாரண உதவி அறிவித்தோம். சிறுபான்மை மக்கள் மீது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு ஏன் திடீர் பாசம் வந்துள்ளது என தெரியவில்லை. தமிழ்நாட்டில் வகுப்புவாத சக்திகளால் வெற்றி பெற முடியாது. இந்தியா கூட்டணிதான் வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.







