விடுதலை சிறுத்தைகள் கட்சியின் அறச்செல்வம் என்கிற தருமலிங்கம் காலமானார். அவரின் இறப்பு குறித்து அக்கட்சியின் நிறுவனர் தலைவர் தொல்.திருமாவளவன் கூறியிறுப்பதாவது :-
கட்சியின் மேனாள் அரசியல் தலைமை குழு செயலாளர் தோழர் அறச்செல்வம் என்கிற தருமலிங்கம் (95) அவர்கள் காலமானார் என்பதையறிந்து மிகவும் வருந்துகிறேன். நாடாளுமன்ற த் தேர்தலையொட்டி கர்நாடகாவில் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிக்க பெங்களூரு வந்துள்ள நிலையில், இன்று காலையில் தோழர் அறச்செல்வம் அவர்களின் அன்பு மைந்தர் ஞானபாரதி அவர்களைத் தொடர்பு கொண்டு ஆறுதல் கூறினேன். உடனே புறப்பட்டு வர இயலாமைக்கு எனது வருத்தத்தையும் வெளிப்படுத்தினேன். கட்சியின் சார்பில் பொதுச்செயலாளர் தோழர் ரவிகுமார், துணை பொதுச்செயலாளர் வன்னிஅரசு, மாநில செயற்குழு உறுப்பினர் தமிழேந்தி ஆகியோர் நேரில் மலர் வளையம் வைத்து வீரவணக்கம் செலுத்தினர். தோழர் அறச்செல்வம் அவர்கள் முற்போக்கான சிந்தனையாளர். இடது சாரி இயக்கத்திலிருந்து மக்கள் பணியாற்றியவர். குறிப்பாக, சிபிஐ (எம்.எல்- விடுதலை)இயக்கத்தின் முன்னணி தோழர்களான அமல்ராஜ், ஐ.பால்ராஜ், ஞா.தேவராஜ், பேரா. கல்யாணி, துரை.ரவிகுமார் போன்றோருடன் இணைந்து வெண்மணி படுகொலைக்கு எதிராக மக்களைத் திரட்டி வெகுசன போராட்டங்களில் பங்கேற்றவர். தீவிரமான தமிழ்த்தேசியப் பற்றாளர். பிற்காலத்தில், பாமகவில் இணைந்து சிலகாலம் பணியாற்றினார். பின்னர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் இணைந்து ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் மாநில செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளையேற்று செயல்பட்டார். தோழர் உஞ்சை அரசன் போன்ற இடதுசாரி சிந்தனைகளை உள்வாங்கிய பல ஆளுமைகளை கட்சிக்கு அறிமுகப்படுத்தியவர். வயது மூப்பிலும்கூட சோர்வின்றி, மிகுந்த ஊக்கமுடன் கட்சியின் அனைத்துப் போராட்டங்களிலும் தவறாமல் பங்கேற்றவர். அண்மைக்காலமாக, நடமாட்டம் குறைந்து படுக்கையிலிருந்தார். தனது இறுதிமூச்சு வரையில், புரட்சியாளர் அம்பேத்கர், தந்தை பெரியார் மற்றும் மாமேதை கார்ல்மார்க்ஸ் ஆகிய கொள்கை ஆசான்களின் வழியில் தடம் மாறாமல் உறுதிப்பாடு மிக்கவராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். அவரது மறைவு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட இடதுசாரி இயக்கங்களுக்கு நேர்ந்த பேரிழப்பாகும். அவருக்கு எனது செம்மாந்த வீரவணக்கத்தைச் செலுத்துகிறேன். அவரை இழந்து வாடும் குடுத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். என்றார்.
